கழிப்பறை. இதற்கும் எனக்கும் பிணக்கம் அதிகம். நல்ல நண்பன். நல்ல ஆசிரியன். நல்ல மனிதன். ஏன் அதற்கும் மேல்.
முன்பு போல இப்போது இல்லை. முன்பெல்லாம். தனிமை அவ்வளவு பிடிக்கம். அதுவாகவே என்னை தன்னுள் இழுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது என்னை இழுத்தாலும், நான் விலகிக்கொள்கிறேன். அது என்னை அடிமை படுத்துகிறது. அதை பற்றி பேசுவதற்கு தான் நான் இங்கு வந்தேன்.
கழிப்பறை, “ கெளதம சித்தார்த்தா, உனக்கு என்ன தான் பிரச்சணை? இத்தணை நாள் தனிமையை அனுபவித்துவிட்டு, இப்போது ஏன் பிடிக்கவில்லை என்கிறாய்? அடிமை படுத்துவதாக சொல்கிறாய்? அதில் திளைத்து தானே நீ ஞானம் பெற்றாய்?.....”
“ஆம் ஞானம். பெரிய ஞானம்…”
”வெளிப்படையாக சொல்”
என்னால் அடக்க முடியவில்லை. கொட்டிவிட்டேன்.
“ உலகில் மிகவும் சுதந்திரமானவன் நான். எதுவும் யாரும் என்னை அடிமை படுத்த முடியாது. இந்த தனிமை உட்பட. ஆனால் எனக்கு ஒரு ஆசை. அவ்வளவே…”
“ஆஹா அது தான் கதையா? நீ தான் ஆசைகள் துறந்தவனாயிற்றே? பதினைந்து வயதில், உன் ராஜ வாழ்க்கை, செல்வம், கெளரவம் எல்லாத்தையும் தூக்கியெறிந்ததாக சொல்வார்கள்? பின் என்ன ஆசை?”
“தனிமையை நிரப்ப வேண்டும்”
“உன் சிஷியர்களோடு இரு, உன்னை பார்க்க வரும் மக்களோடு நேரம் செலவிடு”
“நண்பரே தனிமை வேறு, தனியாக இருப்பதென்பது வேறு”
“ பின், எதனால் நிரப்பமுடியும்?”
“ஒரு பெண்னால்”
“ஆகட்டும்”
“எப்படி”
“கெளதமா அது பெண்ணுக்கு மட்டும் தான் தெரியும்”
“எனக்கான பெண் வேண்டும்”
“பொரு. சுவாரையை அழைக்கிறேன்”
”கொஞ்சம் இரு. நான் வெளியே போகிறேன். அவளை அங்கு வரச்சொல். இங்கு வேண்டாம்”
“அட கெளதமா… சுவாரையை இங்கு மட்டும் தான் பார்க்க முடியும்.”
****************************************************
சுவாரை என்னை போல கரு நிறம். மிகவும் அழகானவள். வலது கன்னத்தில் ஒரு மச்சம். புட்டத்தை தொடும் முடி. இத்தாதி… இத்தாதி……..
*******************************************
அன்று முதல் தினமும் பல மணி நேரம் கழிப்பறையில் கழித்தேன். நான் நுழைந்தவுடன், சுவாரை வந்து விடுவாள். சில நேரம், பேசுவோம், சில நேரம் சண்டையிடுவோம், சில நேரம் விளையாடுவோம், சில நேரம் புணர்வோம். ஆனால் அதிக நேரம் என்னிடம் கேள்விக் கேட்பதிலேயே கழித்தாள்.
“நீ உன் பதினைந்து வயதில் சவ ஊர்வலத்தை பார்க்காமல். ஒரு பெண்ணின் முழு உடலை பார்த்திருந்தால் இல்லை ஒரு பெண்ணை காதலித்திருந்தால் இப்போது என்னவாய் இருந்திருப்பாய்?”
“தெரியவில்லை”
“……….?”
“தெரியவில்லை”
“…………?”
“தெரியவில்லை. ஏன் உச்சக்கட்டம் அடைந்த பின்னும் என் நெற்றியில் முத்தம் கொடுக்க துடிக்கிறாய் சுவார? ஏன் எப்போது கூட என் தலையை கோதுகிறாய்?”
”…”
“அட இது தான் வெட்கமா?”
“என்னைவிட அழகாக, அறிவாக, ஒரு பெண் வந்தாள். என்னைவிட்டு விடுவாயா?”
“நிச்சயம். நீ?”
”நான் அப்படியில்லை. என்னால் முடியாது.”
”ஏன் என்னை அவ்வளவு பிடிக்குமா?”
“நிறைய. அளவில்லை”
அவள் மடியில் படுத்துக்கொண்டு அழுதேன்.
“சுவார…சுவார…”
****************************************
இப்போது போதனைகளை நிறுத்திவிட்டேன். எப்போதும் சுவாரை தான். அவளுக்காக நான் எனக்காக அவள். ஒன்றோடு ஒன்றாகிவிட்டோம். என்னேரமும் எனக்கு அவள் நினைவு தான். அவள் கண்ணசைவுக்காக காத்துக்கிடந்தேன்.
*****************************************
”சுவார… சுவார…. என் ராஜாங்காத்தின் ராணியே, எங்கே இருக்கிறாய்? சுவார…. சுவார”
“கெளதமா? யாரை தேடுகிறாய்? “
”நண்பா நீயா? எங்கே என் சுவார”
“சுதந்திர புருஷா… ஞானப்பிதாவே…. எங்கே நீ”
“நண்பா யாரை தேடுகிறாய்?”
“உலகின் மிகவும் சுதந்திரமானமன், யாருக்கும் எதற்கும் அடிமையாக இல்லாதவன், உலகத்துக்கு ஞானத்தை போதிப்பவன்… என்று ஒருவர் இங்கு திரிந்தாரே. அவரை தான்?”
“என்ன கெளதமா? அவரை நினைவிருக்கிறதா?”
என்னால் பேசமுடியவில்லை. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“இந்த கழிப்பறை புத்தனின் போதனை ஏறுகிறதா? தனிமையை நிரப்பவந்தவள் உன்னையே மூழ்கடித்துவிட்டாளா?”
“ஆம் நண்பா”
“ அவளிடமே மொத்த ஞானமும் புதைந்துக்கிடக்கிறது. போதி மரத்தை விடுத்து. போய் அவளை தேடு”
“அவள் எங்கு இருப்பாள்?”
“நீ உன் உள்ளேயும் வெளியேயும் போட்டுக்கொண்ட வேஷங்களை களைத்தால் அவளே உன்னை அள்ளிக்கொண்டுப் போவாள்”
“நிச்சயம் நண்பா. ஒருவேளை என் பதினைந்து வயதில் சவ ஊர்வலத்தை பார்க்காமல். ஒரு பெண்ணின் முழு உடலை பார்த்திருந்தால் இல்லை ஒரு பெண்ணை காதலித்திருந்தால் இப்போது நான் என்னவாய் இருந்திருப்பேன் நண்பா?”
No comments:
Post a Comment