“காஃபி??”,அவளை நோக்கியவாறு கேட்டான்.
இன்றைய நவநாகரீக டீ-ஸ்ர்ட் தலைமுறைகள் அதிகம் சங்கமிக்கும்
நவீன குளிரூட்டப்பட்ட தேனீர்விடுதி.
எப்போதும் அமரும் வடக்குதிசையில்
உள்ள கடைசி இரட்டை நாற்காலிகள் கொண்ட மேஜை தான் இன்றும்.
“இல்ல வேணாம்” என்று மென்று முலுங்கினாள்.
”சரி சொல்லு அச்சிரா”
சிறிது மெளனத்திற்கு பிறகு பேசதொடங்கினாள்.
அவன் நாற்காலியின் ஒரு ஓரமாக சாய்ந்துக்கொண்டு, அவள் இசையிதழை பார்த்தவாறு இருந்தான்.
“அபிலாஷ் எப்பிடி சொல்றதுனு தெரியல. நீயா புரிஞ்சிப்பனு நினைக்கிறேன்….”, ஒவ்வொறு வார்த்தைக்கும் நீண்ட இடைவேளை தந்தாள்.
‘சொல்லு’ என்பது போல் தலையை கீழே ஆட்டினான்.
“…..நாம ரெண்டு வருசமா எப்பிடி பழகுறோம்னு
உனக்கு தெரியும். ஆனா இப்ப……………. ஐகான்ட்…………..”, தன் பேச்சை விடாமல் தொடர்ந்தாள்.
அவனுக்கு அவளுடைய பேச்சை கேட்க விருப்பம் இல்லை. ஆனாலும் அவன் தன் கண்களை மட்டும் அவளிடமிருந்து எடுக்கவில்லை. அவன் எண்ணமெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே மேஜையில் நிகழ்ந்த ‘அழகான கொலை’
யை பற்றியே இருந்தது. அந்தநாளில் அவளால் மலர்ந்த அந்த பொன் மாலைபொழுதில் அவர்களுடைய
முதல் உரையாடலில் மூழ்கியிருந்தான்.
அந்த உரையாடலையும் அன்று அவன் தான்
தொடங்கிவைத்தான்.
“காஃபி??”, அவளை நோக்கியவாறு கேட்டான்.
“இல்ல வேணாம்”, என்றவள் சொல்லி முடித்தவுடன் தன் முகத்தை கீழே இறக்கிக்கொண்டாள்.
” சரி சொல்லு அச்சிரா”
அவளுடைய மொழிகளுக்காக காத்திருந்தான்.
அவள் தன் தலையைத் தூக்கி அவனைப்
பார்த்தாள், பின் வேகமாக தலையை கீழே இறக்கிக்கொண்டாள். அவனுக்கு அது கண்களில் ஈட்டியை வீசியது போல இருந்தது. ஆனாலும் அவனுக்கு அது இனித்தது.
“ எவ்வளோ நேரம் இப்பிடியே அமைதியா
இருப்ப?”
“ம்ம்ம்…”
“தென்..”
“தென்..”
சிறிது அமைதிப் பரவியது.
“நமக்கு பிறக்கப்போற குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிறியா?”
அவள் மறுபடியும் தன் தலையைத் தூக்கி,
அவளை பார்த்தாள். இந்த பார்வை தொடர்ந்தது.
பின் சிரித்துக்கொண்டே தலையை கீழே
இறக்கிக்கொண்டாள். அவனுக்கு இதுவே போதும் என்று தோன்றியது.
“அது என்னங்க மேடம், அச்சிரானா?”
“அச்சிரம்னா குளிர்காலம்”
”அப்ப எப்ப மழையா மாறி என் மேல பொழியப்
போறிங்க?”
“ஹ்ஹ்ம்ம்ம்…..
இப்போதைக்கு பனி மட்டும் தான்”
பெண்மையும், நாணமும் வேறில்லை என்பதை அவள் அந்த பொழுதில் அவனுக்கு உணரவைத்தாள். அவள் பேச்சைக் கேட்ககேட்க அவனுக்கு அவர்களை சுற்றியுள்ள பொருட்கள்
ஒவ்வொன்றாக மறைவதைக் கண்டான்.ஒரு கட்டத்தில் அவர்கள் மட்டுமே
இருந்தனர்.
அவள் கைகளைப் பற்றிக் கொள்ள ஆசைப்பட்டு,
மெதுவாக தன் விரல்களை நகர்த்தி
அவள் விரல்களை வருடத்தொடங்கினான். அவள் அருகில் இருந்த மெனுகார்டால், அவன் கையில்
‘பளீர்’ரென்று அடித்தாள்.
அவன் சிரித்துக்கொண்டே கையை தன் பக்கம் நகர்த்திக்கொண்டான். பின்பு பல நாட்கள் அவர்கள் இதே மேஜையில் காஃபி அருந்துவர், சில நேரம் அவள் சிரிப்புடன் சில நேரம் அவள் அழுகையுடன்.
“அபிலாஷ்”, என்று உரத்தக் குரலில் மூழ்கியிருந்தவனை நிகழ்காலத்திற்கு தூக்கிவந்தாள்.
“என்ன நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ எந்த நியாபகத்துல இருக்க”
“சாரி சாரி சொல்லு”
“……………………ஐ தின்க் இட்ஸ்
த டைம்டூ மூவ் அவே…………
ஐ லைக் டூலீவ்………………சூழ்நிலையப்பிடி……………உன்ன ஹேட் பன்னிர்ந்த மன்னிச்சுக்க………………..ஜஸ்ட் ஃப்ர்காட் ஆல்………….அண்ட் டோண்ட் தின்க், ஐ ட்ரையிங் டூ ஜஸ்டிஃபை மைசெல்ஃபு…………………”
அவன் அவளை நோக்கி மெதுவாக தலையசைத்துக் கொண்டேசிரித்தான்.
“தன்க்யூ….. நான் கிளம்புறேன்”,
என்றாள் முகம் கொடுக்காமல்.
“ம்ம்ம்….”
அவனுக்கு அவள் மீது சிறிதும் கோவம் இல்லை.
அவனுடைய அச்சிரா கண் முன்னே மடிந்துப்
போனதை எண்ணிக் கவலைக்கொண்டான்.
‘இவள் யார், என் அச்சிராவை பற்றிப் பேசுவதற்கு?.......இவள் யார் என் அச்சிராவை மறக்கச் சொல்வதற்கு?’
”பாஸ் காஃபி” என்றார் அவர்கள் காதலுடன் நட்பு கொண்டிருந்த சர்வர்.
No comments:
Post a Comment