Friday 31 October 2014


                                                     
                             அவருக்கு நடுநிசியில் விழிப்பு வந்தது. அடிநாக்கு வற்றியது போல் இருந்தது. மெலிந்த வலுவற்ற கைகளை இருவாக்காக ஊன்றி எழுந்தார். கட்டிலுக்கு அடியிலிருந்த கைத்தடியை எடுத்துக்கொண்டார்.  அடுப்படியை நோக்கி, அந்த இருட்டறையில் நடந்தார். அவருக்கு ரோஜா பூக்களின் வாசனையடிக்கத் தொடங்கியது. நடக்கும் வழியில் சிலர் அமர்ந்திருப்பது  போல் உணர்ந்தார். தடியால் துலாவிப்பார்த்தார், யாரும் இல்லை. சுவரோரமாகவே நடந்துச் சென்று அடுப்படிக்கு போனார். தண்ணீரைக் குடித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடல் ஐஸ்கட்டியைப் போல் ஜில்லென்றிருந்தது. மீண்டும் சுவரோரமாக நடந்து வருகையில் பத்திவாசனை வந்தது. அதை பொருட்படுத்தாமல் கட்டிலில் போய் படுத்துக்கொண்டார்.  கண்களை மூடினார். ஒப்பாரிக்குரல் கேட்டது. பயந்துப் போனவர் விழித்து மேலிருட்டையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அயர்ந்துத் தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுகையில் உடம்பில் ஒரு அபார சக்தியை உணர்ந்தார். எந்தக் கஷ்டமுமின்றி உற்சாகமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றார்.   திரும்பிக் கட்டிலைப் பார்த்தார், அதில் அவர் சவ அலங்காரத்துடன்  படுக்க வைக்கப்பட்டிருந்தார். நின்றுக்கொண்டிருந்த அவருக்கு, உடம்பு பற்றியெரிவதுப் போலிருந்தது.  அழுகையும் வாசனையும் இப்போது இல்லை. மயான அமைதியை உணர்ந்தார்.
                            

No comments:

Post a Comment