Friday 2 October 2015

கெளரவம்

                                ஈஸ்வரி எப்பொழுதும் தன் கடையை ஏழு மணிக்கு தான் திறப்பாள். ஆனால் இன்று ஆறு மணிக்கெல்லாம் திறந்ததுடன், வேலைகளையும் வேகவேகமாக செய்துக்கொண்டிருந்தாள். மூன்று வகை சட்னி, பாசிப்பருப்பு சாம்பார், துவயல் ஆகியவற்றை சமைத்துவிட்டு, இட்லியை வேகவைக்கத் தொடங்கினாள். குடிநோயால் கணவன் இறந்த பின், ஈஸ்வரி இந்த இட்லி கடையை கடன் வாங்கி ஆரம்பித்தாள். பத்து வருடங்களாக இந்த கடைக்கு, அவள் தான் முதலாளி, வேலையாள் எல்லாம். மாலை நேரங்களில் மட்டும் அவளுடைய இரண்டு மகள்கள் உதவிக்கு வருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மூத்தவளை தாய்வழியில் நெருங்கிய சொந்தத்தில் கட்டிக்கொடுத்தாள். மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டுகிறான். மகளை அவன் வசதிக்கேற்ப நன்றாக பார்த்துக்கொள்கிறான். இதுவரை பிரச்சனை இல்லை.  அவள் யோசனையெல்லாம், இளயவள் மேல் தான். இன்று அவளை பெண்பார்க்க வருகின்றனர். ஒரு மணி நேரம் முன்னரே கடையை திறக்க இது தான் காரணம்.
        பெண்பார்க்கும் படலம் இரண்டு நாட்களுக்கு முன் தான் அவசரம் அவசரமாக எடுக்கப்பட்டது. அப்படி ஒன்றும் இளயவளுக்கு வயதாகிவிடவில்லை. போன வருடம் தான் பத்தாவது முடித்தாள். அதற்காக காரணமில்லாமல் இல்லை. இளயவள் பள்ளிக்கு செல்கையில், அந்த பகுதி இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின் இருவரும் ஊர்சுற்றுதலும் நடந்திருக்கிறது. ஒரு நாள் அவன், அவளை பார்க்க வீடு வரை வந்ததாகவும், உள்ளே இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அக்கம்பக்கத்தினர் தன் காதுபட பேசும் போதுதான், ஈஸ்வரிக்கு இந்த விவகாரமே தெரிந்தது. போன வாரம், ஈஸ்வரி வீட்டில் இருக்கும் சமயம், குடிபோதையில், அவளை பார்க்க வீட்டிற்கே வந்து விட்டான். ஈஸ்வரி கோபத்தில் அவனை அடித்து தெருவில் தள்ள, அவன் போதையில் தாயையும், மகளையும் ஏச, தெருவில் அவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. அங்கு ரோந்தில் இருந்த போலீஸார், அவனை கண்டித்து அனுப்பிவைத்தனர். இதனால் பள்ளிப் படிப்பை நிருத்திவிட்டாள். ரேசன் கடை, மளிகை கடை, குழாயடி, பால் டிப்போ என எங்குமே ஈஸ்வரியால் முன்பு போல செல்ல முடியவில்லை. யார் முகத்தையும் பார்க்காமல், யாரிடமும் பேச்சுக்கொடுக்காமல் தலையை குனிந்தே நடக்க வேண்டியிருந்தது. ‘இவ மக எடம் கொடுக்கலனா, அவ்வே வீடுவரைக்கும் வருவானா?’, என தெரு முழுதும் ஈஸ்வரியை பற்றியே பேச்சு நிகழ்ந்தது. ஈஸ்வரியால் முன்பு போல் கடையில் வேலை செய்ய முடியவில்லை. ‘இத்தண நாள் சேத்துவச்ச கெளரவம் ஒரே நாள்ல போச்சே’ என்று தனக்குள்ளே பொருமிக்கொண்டிருந்தாள். மகளின் உடனடி திருமணம் தான், அவள் குடும்பத்தின் கெளரவத்தை மீட்டெடுக்கும் ஒரே தீர்வாகப் பட்டது. தன் தம்பியிடம் எல்லா விவரத்தை சொல்லி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு வரனை பார்க்கச் சொன்னாள். அப்படியமைந்தது தான் இன்று பெண்பார்க்க வரும் வரன்.
              மாப்பிள்ளை வீட்டார் பதினோரு மணிக்கெல்லாம் வருவதாக சொன்னதால், ஒன்பது மணிக்கு கடையை மூடிவிட்டாள். தேவையான பொருட்களை நேற்றே வாங்கி வைத்துவிட்டாள். பெண்னை ஈஸ்வரியின் அக்கா மகள்கள், நீராட்டு விழாவில் ஈஸ்வரியின் தம்பி சீராகக் கொடுத்த பட்டை உடுக்கச்செய்து அலங்கரித்திருந்தனர். அவர்கள் வருவதற்குள் வீட்டை சுத்தம் செய்வது தான் பாக்கி. ஒரே ஒரு அறையும், அடுப்படியும் மட்டும் உள்ள வீட்டை சுத்தம் செய்வது அவளுக்கு பெரிய காரியமில்லை. பத்துமணி வாக்கில் சில நெருங்கிய சொந்தங்கள் வர தொடங்கின. பதினொரு மணி நெருங்கையில் அவளுக்கு பயமும், கொஞ்சம் அவுமானமும் தொற்றத் தொடங்கியது. ‘தம்பி எல்லாத்தையும் சொல்லிருப்பான், அவுங்களும் அக்கம் பக்கத்துல விசாரிச்சுருப்பாங்க, எப்பிடி மாப்பிள்ள வீட்டுக்காரங்க மொகத்துல முழிக்கிறது. அத காரணம் வச்சு, பவுனும் கூடப்போடச் சொன்னா?’.
            பதினொன்றரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். மாப்பிள்ளை பெண்னைப் போல் மாநிறம். அதே பகுதியில் ஒரு லேத்தில் வேலை செய்கிறான். மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான். பெண் காப்பி தட்டுடன் வந்தாள். அவள் முகம் அழுது அழுது வீங்கிப்போயிருந்தது. கண்களும் உள்புறமாக அமுங்கியிருந்தது. இவற்றை ஓரளவுக்கு முகப் பவுடர் மறைத்தாலும், கீழ் உதட்டருகே இருந்த ரத்தக்காயம் நன்றாக தெரிந்தது. அது முந்திய இரவு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. கல்யாணம் பேசி முடிக்கப்பட்டு, மடப்புறம் மாரியம்மன் கோவிலில், அதே மாதம் ஒரு முகுர்தத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது. கையில் கழுத்தில் இருந்ததை போட்டு சீர் செய்துவிட்டாள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த வாடகை வேனில், தெருகாரர்களை கல்யாணத்திற்கு அழைத்து வந்தது, அவளுக்கு கெளரவமாக இருந்தது. ‘அந்த குடிகார நாய் வந்து ஏதாவது பிரச்சண பண்ணாம பாத்துக்கனும்’ என்று தம்பியிடம் சொல்லிக்கொண்டிருதாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
               ஒரு வருடம் கழித்து, இளயவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அதை வீட்டு வாசலில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அணைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் நோக்கில், சத்தமாக தன் பேரனை கொஞ்சினாள். எல்லோரும் ஈஸ்வரியையும், அவள் பேரனையும் பார்த்துக்கொண்டிருந்தனர். குழந்தை சிரித்தது. அதை பார்த்து மகளும் சந்தோஷத்தில் சிரித்தாள். ஈஸ்வரிக்கு இப்போது எல்லா கவலைகளும், அவுமானங்களும் பறந்துப் போய்விட்டது. இனி ஈஸ்வரி, ரேசன் கடை, மளிகை கடை, குழாயடி, பால் டிப்போ என எங்கும் கெளரவமாக செல்லலாம். இதை நினைத்து, ஈஸ்வரி சிரித்துக்கொண்டே இருந்தாள்.

No comments:

Post a Comment